ஞாயிறு 08 2015

கோவன்... இருண்ட காலத்தின் போர்க்குரல்!





                                                                       கோவன்... இருண்ட காலத்தின் போர்க்குரல்!










Prpc Milton Jimraj என்பவர் Jim Raj Milton மற்றும் 3 பேர் ஆகியோருடன்
கோவன்... இருண்ட காலத்தின் போர்க்குரல்!
'மச்சி ஓபன் தி பாட்டில்...’ எனப் பாடினால், வரிவிலக்கு தருகிறது தமிழ்நாடு அரசு. ஆனால், 'மூடு டாஸ்மாக்கை மூடு...’ எனப் பாடினால், தேசத் துரோக வழக்கு பாயுமாம். சாராயக் கடையை மூடச் சொல்வது தேசத் துரோகம் என்றால், சாராயம் விற்பது என்ன தேசபக்தியா? மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுப் பாடகர் கோவன் கைதுசெய்யப்பட்டிருக்கும் விவகாரம், இன்று இந்தியா முழுவதும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அ.தி.மு.க., பா.ஜ.க நீங்கலாக அனைத்து அரசியல் கட்சிகளும் இதைக் கடுமையாகக் கண்டித்திருக்கின்றன. பல்வேறு அரசியல், சமூக அமைப்புகள் கோவன் கைதைக் கண்டித்து, களத்தில் இறங்கிப் போராடுகின்றன. இணையத்தில், கோவன் கைதுக்கு மிகக் கடுமையான எதிர்க்குரல்கள் எழுந்திருக்கின்றன.

'மூடு டாஸ்மாக்கை மூடு...’, 'ஊருக்கு ஊர் சாராயம் தள்ளாடுது தமிழகம்...’ என்ற இரண்டு பாடல்களைப் பாடியதற்காகவும், அதை மக்களிடம் பரப்பியதற்காகவும்தான் கோவன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த இரண்டு பாடல்களும் வெளியிடப்பட்டு சில மாதங்கள் ஆகின்றன. கோவன் கலைக்குழுவைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு முழுக்க நூற்றுக்கணக்கான மேடைகளிலும் கிராமப்புறங்களிலும் அன்றாடம் இந்தப் பாடல்களைப் பாடிவருகின்றனர். இந்த நிலையில், இத்தனை காலம் கழித்து இப்போது திடீர் கைது!

கைதுக்கு இத்தனை வீரியமான எதிர்வினையை அரசு எதிர்பார்க்கவில்லை. கைதைக் கண்டிக்கும் பலரும் கோவனின் கடந்த காலச் செயல்பாடு களை நினைவுகூர்கின்றனர். கடந்த 25 ஆண்டு களுக்கும் மேலாக தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இடைவிடாமல் ஒலிக்கும் குரல் இவருடையது. இன்று தமிழக இடதுசாரி அரசியலில் இயங்கிக்கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் 'கோவன்’ என்ற பெயர் பரிச்சயம். பாபர் மசூதி இடிப்பு, தென் மாவட்டக் கலவரங்கள், சங்கராச்சாரியார் கைது, கோவை கலவரம் என, தமிழ்நாட்டின் எரியும் சமூகப் பிரச்னைகள் அனைத்தையும் பாடல் வடிவில் மக்களிடம் கொண்டுசேர்ப்பவர். அரசியல் உக்கிரமும் கவித்துவ நீதியும் கலந்த கோவனின் குரலை யாராலும் புறக்கணிக்க முடியாது. இதே ஜெயலலிதாவின் 1991-96 ஆட்சிக் காலத்தில் 'இருண்ட காலம்’ என்ற தலைப்பில் பாடல் ஒலிப்பேழை ஒன்று வெளியானது. அப்போதைய ஜெயலலிதா ஆட்சியின் அடக்குமுறைகள் அனைத்தையும் துணிவுடன் கேள்வி கேட்கும் பாடல்கள் அவை. ஜெயலலிதா மட்டும் அல்ல, தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் சமரசமின்றி எதிர்ப்பதில் முன்நிற்பவர் கோவன்.


''இந்தக் கைதையும் அந்தக் கோணத்தில் இருந்துதான் புரிந்துகொள்ள வேண்டும். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் கேடுகளை அம்பலப்படுத்தி நாங்கள் செயல்பட்டுவருகிறோம். அவை அனைத்தும் இந்த அரசுக்கு எரிச்சலூட்டக்கூடியவை. டாஸ்மாக் சாராயக் கடைகள் தமிழ்நாட்டின் உழைக்கும் மக்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் எவ்வளவு மோசமாகச் சிதைத்திருக்கின்றன என்பதை கடந்த சில மாதங்களாக பிரசாரம் செய்துவருகிறோம். இந்தப் பாடல்கள், டாஸ்மாக்கின் பாதிப்புகளை மிகவும் துல்லியமாக, உணர்ச்சிபூர்வமாக விளக்குகின்றன; டாஸ்மாக்கினால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களை, சமூகத்தின் இதரப் பிரிவு மக்களிடம் கொண்டுசேர்க்கின்றன. இந்த அம்சங்கள் ஆளும் வர்க்கத்தினரை அஞ்சி நடுங்கவைக்கின்றன. இதை மற்றவர்களும் பின்பற்றிவிடுவார்களோ என அவர்கள் பயப்படுகிறார்கள். அதனால்தான் எங்களை முடக்க நினைக்கின்றனர்'' என்கிறார் 'மக்கள் அதிகாரம்’ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சி.ராஜூ. இந்த அமைப்பின் சார்பில்தான் இரண்டு டாஸ்மாக் எதிர்ப்புப் பாடல்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.



'சாராயக் கடையை மூடு’ எனச் சொன்னதற்காக கைது, அதுவும் தேசத் துரோக வழக்கில் சிறை என்பதைத்தான் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் கண்டனங்களும் குவிகின்றன. மேலும் தேசிய அளவில் தபோல்கர் கொலை, கல்புர்கி கொலை, தாத்ரி சம்பவம் என ஓர் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத்தான் உலக வரலாற்றிலேயே இல்லாத வகையில், 40-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளைத் திருப்பித் தந்துள்ளனர். இப்போது விஞ்ஞானிகளும் விருதுகளை மத்திய அரசுக்கே திருப்பி அளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.



இந்தச் சகிப்புத்தன்மையற்ற ஜனநாயக மறுப்பின் தொடர்ச்சிதான் கோவன் கைது. 'மாட்டுக்கறி தின்றால் கொலை’ என்பது மத்திய அரசின் நிலை என்றால், 'மதுக்கடையை மூடச் சொன்னால் கைது’ என்பது மாநில அரசின் நிலை. அங்கு வேண்டும் என்பதை நிராகரிக்கின்றனர்; இங்கு வேண்டாம் என்பதை நிர்பந்தப்படுத்துகின்றனர்.



கவிஞர் பெர்டோல்ட் பிரெக்ட்டின் புகழ்பெற்ற கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

இருண்ட காலத்தில் பாடல் ஒலிக்குமா?
ஒலிக்கும்
இருண்ட காலத்தைப் பற்றி!
கோவன்... இருண்ட காலத்தின் போர்க்குரல்!
- பாரதிதம்பி, டாஸ்மாக்கை மூடு,
ஆனந்தவிகடன்,11-நவம்பர் 2015

6 கருத்துகள்:

  1. போர்க்குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் தோழர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டாஸ்மாக்கை மூடும் வரை போர்க்குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் நண்பரே.......

      நீக்கு
  2. மாற்றம் இனியெனிம் கிடைக்கும் நண்பரே,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போர்க்கோலம் பூண்டால் மாற்றம் கிடைக்கும் நண்பரே...

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...