வெள்ளி 27 2016

வித்தகம் பேசிய கோர்ட் அமீனா..



காலை ஏழு மணி. அவர்  வீட்டின் வாசலில் நின்று இங்கு கணேசன் என்பவர் யார் என்று கேட்டார்.

கைப்பனியனும் கைலியும் அணிந்திருந்து வாசற்படியில அமர்ந்திருந்த ஒருவர்  நான்தான் கணேசன் என்ன விசயம் என்று கேட்டார்.

மாவட்ட கோர்ட்டிலிருந்து உங்கள் பெயருக்கு சம்மன் கொடுக்க வந்திருக்கும் அமினா என்றார்.

வீட்டின் வாசற்கதவருகில் உட்கார்ந்திருந்தவர் ஒரு நிமிடம் என்றபடி வீட்டிற்குள் இருந்த இரண்டு சேர்களை எடுத்து வாசல் முன் போட்டு வந்தவரை அமரச் சொன்னார்.

சம்மனை வாங்கி பார்த்துவிட்டு. இனிசியலை தப்பாக போட்டுவிட்டார்க்ளே என்று அவரிடம் கேட்டபோது..அது பெரிய விசயமில்லை உங்கள் வக்கிலிடம் சொல்லி சரி செய்து கொள்ளலாம் என்றார்.

கையெழுத்து போட்ட பேப்பரை வாங்கிக் கொண்டு  “ தங்கள் வீட்டு முகவரியை கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன் என்றார்.
இவர் சம்மனில் உள்ள முகவரியை சுட்டிகாட்டி தெட்டத் தெளிவாக எழுதப்பட்ட  இந்த முகவரியைக் கண்டுபிடிக்கவா  ரெம்ப சிரமப்பட்டீர் எனறு கேட்டார்.

“ ஆமாம் சார்எனற்ர் அமீனா.

“ தாங்கள் உள்ளுரா...? வெளியூரா...ஃ என்று கேட்டார் இவர்.

 “ உள்ளுர்தான் என்ற போதும். இந்த முகவரியை கண்டுபிடிக்க சிரமப்பட்டேன் சார்எனறார் மீண்டும்.

“ அப்படியாஎன்றவரிடம்  செலவுக்கு கொடுங்கள் என்றார். வந்தவர்.

“என்ன செலவுக்கு என்றார் இவர்

தங்கள் முகவரியை அலைந்து தேடி கண்டுபிடித்து உங்களிடம் சம்மனை சேர்ப்பித்தற்கு என்றார்.

“ இப்படி கொண்டு வந்து கொடுப்பது கோர்ட்டில் வேலை செய்யும் உங்கள் பணிதானே... இதற்கு நான்..ஏன் செலவுக்கு கொடுக்க வேண்டும் என்றார் இவர்.

“ சார், தாங்கள் அப்படிச் சொல்லக்கூடாது. பிரியப்பட்டு தாங்கள் கொடுக்க வேண்டும் எனற்ர்.

“ அப்படி எதுவும் கொடுத்து எனக்கு பழக்கமில்லை... சரி.. எவ்வளவு வேண்டும் என்று கேட்டார் இவர்

“ தாங்கள் பார்த்து கொடுங்கள் என்றார் வந்தவர்.

“ அதான் சொன்னேன்னே.. எனக்குகொடுத்து பழக்கமில்லை.. வாங்கியும் பழக்கமில்லேன்னு... எவ்வளவு வேண்டும். சும்மா கூச்சப்படாமல் கேளுங்கள் என்றார் இவர்.

“ வந்தவர் ஒரு இரு நூறு ரூபா கொடுங்கள் என்றார்.

“ இரு நூறு ரூபாயா? அதிகமாக இருக்கிறதே.... என்றார்.

“எல்லோரிடமும் வாங்குவதைத்தான் கேட்ககிறேன். சார் என்றார் அவர்.

“ தாங்கள் பதிலீயா... நிரந்தரமா..? என்று கேட்டார் இவர்.

“ நிரந்தர பணிதான் சார் “ என்றார் வந்தவர்.

“ அப்படினா..... ஒங்களுக்கு சம்பளத்துடன் எல்லா சலுகையும் கிடைக்குமே என்றார். இவர்.

“எல்லாம் கிடைச்சு என்ன சார் செய்ய,படித்து முடித்த என் மகளை வேலையில் சேர்க்க பதிணைந்து லட்சம் கேட்க்கிறார்கள். அதைக் கொடுத்து வேலையில் சேர்க்க முடியவில்லை சார் என்றார்.

“ நீங்கள் என்னிடம் கேட்பது மாதிரிதானே... அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள் என்றார் இவர்.

அப்படியில்ல சார். இது வேற...அது வேற..சார்.... இது பிரியப்பட்டு வாங்கிறது. ரெண்டும் ஒன்னாக முடியாது சார்.“ என்றார்.

“ நீங்கள் கேட்பது சின்ன மீன்.. அவர்கள் கேட்பது பெரிய மீன்.. எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது என்றார்.. இவர்.

“உட்கார்ந்திருந்து எழுந்த வந்தவர். “சார் . இருநூறு ரூபாய்க்கு இவ்வளவு பேச்சா சார் என்றார்

“ கோபிக்க கூடாது.. என் தொழிலிலே அப்படித்தான்.. என்றபடி சுவற்றில் அடித்திருந்த போர்டை பார்க்கச் சொன்னார். எனது தொழில் அச்சு தொழில் ஆயிரம் எண்ணிக்கை ஒரு கலர் அடிப்பதற்கு கூலியாக இருநூறு ரூபாய்தான் வாங்கிறேன். பேப்பர் . தனி... அந்த இரு நூறு ரூபாய்க்கு..மைவிலை ஏறிப்போனதையும்.. விலைவாசி ஏறிப்போனதையும் பெட்ரோல், மின்சார பில் கூடிப்போனதையெல்லாம் வாடிக்கையாளரிடம் பேசி அவரை சம்மதிக்க வைக்கறதுக்குல்ல எனக்கு தொண்டை தண்ணி வத்தி போயிரும்.. அதோடு நெருங்கியவர்கள்.. மிக வேண்டப்பட்டவர்கள் நண்பர்கள், வந்தால் அந்த இரு நூறு கூலியில் கொஞ்சம் குறையும்... இந்த விவரங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா...? என்றார்.. இவர்.

“ எனக்கு தெரிஞ்சு என்ன சார், என்றார் வந்தவர்.

“ம்ம்ம்.... அப்படியா...? இருங்க..மாவட்ட கோர்ட்டிலிருந்து என் வீட்டுக்கு வர  சாதாரண பஸ்சுல ரெண்டு பஸ்சுல  ஏறி வந்தாலும்  12+12=24 ரூபாய்தான்  டஜிட்டல் மிதவை பஸ்சுல வந்தால் 18 +18= 36 ரூபாய்தன் ஆகிறது.. ஒரு டீ சேர்த்தால் மொத்தம் ஐம்பது ரூபாய்தான் ஆகிறது. இந்த வேலைக்கு போயி இருநூறு ரூபாய் கேட்டால் எப்படி தலைவா...? என்றார் இவர்.

“அப்படியா...சார். நான் சொல்றதையும் நீங்க கோபப்படாமா... சிந்தித்து பார்க்கனும்.. இந்த சம்மனுக்கு கோர்ட்ல ஆஜராக.. ஒரு வக்கீல பாப்பீங்க.. இல்லயா...அந்த வக்கீலு பீச ரெண்டு மடங்கு உசத்தி கேட்பாரு... நீங்க குறைச்சு போடுங்க சார் என்று கேடப்பீங்க..இல்லையா.. சார்.. அந்த வக்கீலும் குறைக்கிற மாதிரி ஏத்துனதுல கொஞ்சம் குறைப்பாரு... உடனே நீங்களும் குறைச்சத நிணச்சு சந்தோசப்படுவீங்க...அதோடு அந்த வக்கீலின் குமஸ்தாவுக்கும் படி அளக்கனும் கொடுக்கனும் கொடுக்காவிட்டால் காரியம் நடக்காது.  என்கிட்ட பேசின மாதிரியா சார் வக்கீலிடம்  வக்கீல் குமஸ்தாவிடமும் பேசுவீங்க.... என்றார் வந்தவர்.

“ பேசாமல் சற்று அமைதியாக இருந்தவர். சற்று பொறுங்கள் என்று கூறி.....விட்டு  வீட்டிற்குள் சென்று பின் வந்து பின்  அவரிடம்  வந்து இருநூறு ரூபாயை கொடுத்தார்.

“ அந்த இருநூறு ரூபாயை வாங்கியவர்...“ உங்களிடம்தான்.. இவ்வளவு பேசியிருக்கேன் சார்..  நல்லது சார் வர்ரேன் என்று சொல்லிவிட்டு எழுந்து நடந்தார். இவரும் அவருக்கு விடை கொடுத்து அனுப்பினார்

“வீட்டிற்குள்ளிலிருந்து வெளியே வந்த அவருடைய மருமகன்.. இருநுறு ரூபாய்க்கு இவ்வளவு பேச்சா.... என்று கேட்டார்..

“ உன்னிடம் இருநூறு ரூபாய் கேட்டதற்கு...இரு நூறுரூபாயா?? என்று நீயும் கேட்டாயே அய்யா...  அதற்குத்தான் இவ்வளவு என்றார்.

“ சார். என்றபடி.. திரும்பி வந்தார்.. அமீனா.. வந்தவர். ஒரு நூறு ரூபாயை இவரிடம்  சட்டென்று தந்துவிட்டு  நூறு ரூபாய் போதும் சார். என்றுவிட்டு  வர்ரேன் சார் என்றபடி வேகமாய் சென்று மறைந்தார்.

“ கிழிந்த நோட்டை கொடுத்து விட்டதால் வந்துவிட்டாரோ என்று சந்தேகப்பட்ட அவர்  ரூபாயை பார்த்த போது  நல்ல நோட்டாகத்தான் இருந்த்து. . இந்தாப்பா என்று அமினா திணித்த .அந்த நூறு ரூபாயை மருமகனிடமே கொடுத்தார்.




5 கருத்துகள்:

  1. நடந்த உண்மையை அப்படியே எழுதி விட்டீர்களே நண்பரே... கணேசன் மற்றும் மருமகன் உள்பட..

    பதிலளிநீக்கு
  2. அமீனா என்ன ,பரிசா வந்து கொடுத்தார்,அவருக்கு படிஅளக்க ?

    பதிலளிநீக்கு
  3. லஞ்சம் அப்புறபடுத்த முடியாத குப்பை - கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது

    பதிலளிநீக்கு
  4. சமயங்களில் இப்படியும் நடக்கும்!

    பதிலளிநீக்கு
  5. எப்படியெல்லாம் நடக்கின்றது! பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும் என்பது இதனால்தானோ...

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...