வெள்ளி 21 2017

வார்டு நம்பர் 193.....

விட்டத்துக்கு அடியில் கம்பி போட்ட குறுகிய சாளரம். சுவர் அருகே இரும்பு மேஜை. அதனருகில் இரும்பு நாற்காலி, மூலையில் தரைமேல்  குவியலாய் கிடந்தன புத்தகங்கள்.. படிக்க அனுமதித்தார்கள். அவரின் சகோதரிகளும் நதேழ்தாவும் விளாதீமிர் இல்யீச்சுக்குத் தேவைப்பட்ட புத்தகங்களை கொண்டு வந்து தந்தார்கள். நதேழ்தா அன்று இரவு கைது செய்யப்படவில்லை. விளாதீமிர் இல்யீச் லெனின் சிறையில் இடப்பட்டதுமே  அவரின் தாயாரும் சகோதரிகளும் மாஸ்கோவிலிருந்து வந்துவிட்டார்கள்.

அன்று வியாழக்கிழமை-   சந்திப்பு நாள். விளாதீமிர் இல்யீச் புத்தகங்களை ஒரு புறம் வைத்துவிட்டு, கதவுப் பக்கம் முதுகு காட்டியபடி மேஜை அருகே நின்று கொண்டார். கதவில் வட்டப் பார்வைத் துளை இடப்பட்டு இருந்தது. கண்காணிப்பாளன் நிமிடத்துக்கு ஒரு தரம் அதன் வழியாக உள்ளே பார்த்துக் கொண்டிருந்தான். கதவுப் பக்கம் முதுகைத் திருப்பிக் கொண்டு நின்றவாறு விளாதீமிர் இல்யீச்லெனின் ரொட்டியின் மெதுவான பகுதியைப் பிய்த்து உருண்டை பிடித்து விரலால் அழுத்திக் குழிவு ஏற்ப்படுத்தினார். இதுதான் அவர் ரொட்டியால் செய்த மைக்கூடு. மைக்குப் பதில் பால், ஒரு புத்தகத்தை எடுத்து அதன் வரிகளின் நடுவில் பாலினால் எழுதத் தொடங்கினார். ஒரு சொல் எழுதுவார்.பால்  உலர்ந்தது சொல் மறைந்துவிடும். அந்தப் புத்தக்த்தை
இன்று வீட்டுக்கு கொடுத்து அனுப்புவார். நதேழ்தாவோ. சகோதரிகளோ, அந்தப் பக்கத்தை விளக்கருகே காட்டி சூடுபடுத்துவார்கள். சொற்கள் மெதுவாக,  புகைப்பட ஃபிலிமின் நெகட்டிவ் போல ஒவ்வொன்றாகப் புலப்படத் தொடங்கும்-அப்போது கடிதத்தை தாராளமாக படிக்கலாம். அதில் விளாதீமிர் இல்யீச் லெனின் எழுதியது துண்டுப் பிரசுரம்.

டிசம்பர் 8,9 ம் தேிதி இரவில்  ” போராட்டச் சங்கத்தைச்” சேர்ந்த நூற்று அறுபது பேர் விளாதீமிர் இல்யீச்சுடன் கைது செய்யப்பட்டார்கள். அந்தக் கைதால் “ சங்கம்” சிதறிவிடவில்லை. வெளியே ” சங்க்கதினால்” தொடங்கப்பட்ட வேலை நிறுத்தங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தன. விளாதீமிர் இல்யீச் லெனின்  சிறையில் இருந்த படியே வேலை நிறுத்தக்காரர்களுக்காகத் துண்டு பிரசுரங்கள் அனுப்பினார்.

கதவின் மறுபுறம் சாவி கிலுங்கிற்று, பூட்டு கிளிக்கிட்டது. கண்காணிப்பாளன் உள்ளே வந்தான். விளாதீமிர் இல்யீச் ரொட்டி மைக்கூட்டைப் பாலுடன் லபக்கென்று வாயில் போட்டு விழுங்கிவிட்டார்.

கண்காணிப்பாளன்அருகே நெருங்கினான். சுற்றும்  முற்றும் பார்வையை செலுத்தினான். சந்தேகத்துக்கு  இடமான எதையும் காணாமல் அறையிலிருந்து வெளியேறினான்

விளாதீமிர் இல்யீச் இன்னொரு மைக்கூடு செய்து எழுத்து வேலையைத் தொடர்ந்தார்.

ஒரு மணி நேரம் சென்றதும் சாவி மறுபடி கிலுங்கியது. விளாதீமிர் இல்யீச் மணப் பெண்ணைக் கண்டு பேச அழைத்துச் செல்லப்பட்டார். நதேழ்தா கன்ஸதன்தீனவ்னா இரட்டை அழிக் கம்பிகளின் மறுபுறம் காத்திருந்தார். கை குலுக்குவது கூடாது. தலையை அசைக்க மட்டுமே செய்யலாம். புன்னகைக்கலாம். விளாதீமிர் இல்யீச்சைக் கம்பிக் கிராதிகளின் மறுபுறம் காண்பது வேதனையாய் இருந்த போதிலும் நதேழ்தா புன்னகை செய்தார். அவர் சிறிதும் மனம் சோராமல் இருந்தார்.

நதேழ்தா , இல்யீச்சின் தாயார் சார்பிலும் சகோதரிகள் சார்பிலும் முகமன் தெரிவித்தார்.அவர்கள்  நலமாக இருக்கிறார்கள். தங்களை நிணைத்தக் கொண்டு  இருக்கிறார்கள்.. தங்களை நேசிக்கிறார்கள் என்று கூறினார்.

பிறகு விசயத்திற்க்கு வந்தார்கள். ஆனால், இரட்டைக் கிராதி வரிசைகளுக்கு நடுவே அரசியல் போலீசுக்காரன் நடமாடிக் கொண்டு இருந்தவன். அவர்கள் இருவரின்  ஒவ்வொரு  சொல்லையும் உற்றுக் கேட்டுக் கொண்டு இருந்தான்.

“ நூலகப் புத்தகங்களை  இன்று சகோதரிகளுக்கு அனுப்பி வைத்தேன். அதோடு மரீயாவின் புத்தகத்தையும்தான்” என்று கூறி நதேழ்தா கன்ஸ்தீனவ்னாவைக் கூர்ந்து மிகக் கூர்ந்து நோக்கினார் விளாதீமிர்.லெனின்

“ இவர் மரீயாவின் புத்தகம் என்று அழுத்திச் சொன்னதும் .. ஓ..!  அப்படியா!! புரிகிறது, கடிதத்தையோ, துண்டு பிரசுரத்தையோ மரீயாவின் புத்தகத்தில் தேடிப் பார்க்க வேண்டுமாக்கும்!!” என்பதை தன் மனதுத்துக்குள் குறித்துக் கொண்டார் நதேழ்தா.

” விளாதீமிர் இல்யீச் லெனின் மேலும் சங்கேதப் புதிர் போட்டார்.

“ என் வார்டு நம்பர் தெரியுமா ? ” என்று கேட்டார்.

“ தெரியாமல் என்ன ? நிச்சயமாகத் தெரியும். நூற்றுத் தொண்ணூற்று மூன்று ” 

“ எதற்க்காகக் கேட்டார்? என்று வீணாகக் கேட்காமல், துண்டு பிரசுரத்தை193வது பக்கத்தில் தேட வேண்டும் என்பதை புரிந்து கொண்டார் நதேழ்தா.

அரசியல் போலீசுகாரனை இருவரும் வெகு சாமர்த்தியமாக ஏய்த்தார்கள்.

 போலீசுகாரன் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தான்.

“சந்திப்பு நேரம் முடிந்துவிட்டது.”

ஒரு மணி நேரம் எப்படியோ பறந்து விட்டதும் பிரிய மனமில்லை.. துயரம் கவ்வுகிறது.

“மறு சந்திப்புவரை, விளாதீமிர்! நலமே இரு, ஏங்காதே .” என்று நதேழ்தா கூறினார்.

விளாதீமிர் இல்யீச் லெனின் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நடந்தவாறே திரும்பி பார்த்தார். அவர் கண்ணுக்குள் மறையும் வரை நதேழ்தா அப்படியே நின்று கொண்டு இருந்தார்.

பூட்டுத் துளையில் சாவி திருப்பப்பட்டது. இல்யீச் மறுபடி வார்டுக்குள் புகுந்தார். சந்திப்பின் நினைவு அவர் உள்ளத்தில் நிறைந்திருந்தது. இல்யீச் மனக் கண்ணால் காணலானார்.

விளாதீமிர் இல்யீச் லெனின் அரையிருட்டில் நெடுநேரம் குறு நடையில் உலாவியவாறு நதேழ்தாவைப் பற்றி கனிவுடன் எண்ணமிட்டார்.


 தோழர்..நதேழ்தா கன்ஸ்தன்தீனவ்னா

மரீயா பிரிலெழாயெவா-  எழுதிய லெனினின் வாழ்க்கைக் கதையிலிருந்து



6 கருத்துகள்:

  1. எப்படியெல்லாம் கொள்கையை பரப்பியுள்ளார் ,இவரல்லவோ உலகத்தின் ஒரே புரட்சித் தலைவர் :)

    பதிலளிநீக்கு
  2. படிக்கப் படிக்க மெய் சிலிர்க்கிறது நண்பரே

    பதிலளிநீக்கு
  3. ...புரட்சி இயக்கத்தை நடத்துவதென்றால் என்னென்ன உத்திகளை கையாளவேண்டி இருந்திருக்கிறது!

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...