செவ்வாய் 26 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-39..

இருட்டு என்றால் எல்லோருக்கும் பயம்.. அந்த இருட்டில்தான் பல இம்சைகளும் நடக்கும்..அந்த நள்ளிரவு இம்மைசகள்..இதுதான்.


டந்த மே (2018) மாதம் இறுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை பகுதி ஒருங்கிணைப்பாளரும் நெல்லை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞருமான தங்கபாண்டியன், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக, போலீசு மக்களின் வீடுகளுக்கு இரவில் சென்று தேடுதல் வேட்டை செய்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். சம்மன் அனுப்பியே விசாரிக்க வேண்டும் சந்தேகப்படுவோரின் வீடுகளுக்கு சென்று தொந்தரவு செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தது. இந்த உத்தரவை போலீசு எப்படி மதிக்கிறது என்பதற்கு சில உதாரணங்கள்..

டந்த வாரம் (தீர்ப்பு வழங்கி 20 நாட்களுக்குப் பின்னர்) கோவில் பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து என்ற மக்கள் அதிகாரம் உறுப்பினரின் வீட்டுக்கு இரவு இரண்டு மணிக்கு பத்துக்கும் மேற்பட்ட போலீசு திடீரென நுழைகிறது. உறங்கிக்கொண்டு இருந்த அவரின் அம்மாவைப் பார்த்து “தூங்கறீயா, ஒழுங்கா எந்திரி, தலையிலேயே பூட்ஸ்கால்ல மிதிச்சுடுவேன்” என்று மிரட்டுகிறார் ஒரு போலீசு. “என்ன புள்ளய வளர்த்து வச்சுருக்க, தூத்துக்குடியில 13 பேரை கொன்னுருக்கான், இவனை பெத்ததுக்கு நீ சாவணும்” என்று கண்டபடி கத்துகிறார். மற்ற போலீசு சேர்ந்து கொண்டு வசை பாடுகிறது. பள்ளியில் படிக்கும் அவரது தம்பியின் முகவரியை வாங்கிக்கொண்டு “டேய்… மாரி வரல உன்னை நாளைக்கு தூக்கிக்கிட்டு போயிடுவோம்” என்று மிரட்டல் விடுக்கிறது. வீட்டில் உள்ள பொருட்களை கலைத்துப்போடுகிறது. தொடர்ந்து வந்து வீட்டில் மிரட்டிக்கொண்டே இருக்கிறது. “எந்த கெட்டப்பழக்கமும் இல்லாமத்தான நான் எம் மவன வளர்த்தேன், அவனை கொலைகாரன்னு சொல்றாங்களே” என்று கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கிறார் அந்தத் தாய். துப்பாக்கியால் 13 பேர்களை சுட்டுக் கொன்ற போலீசு கூச்சநாச்சமே இல்லாமல் எப்படி பச்சையாக புளுகுகிறது பாருங்கள!
“தூங்கறீயா, ஒழுங்கா எந்திரி, தலையிலேயே பூட்ஸ்கால்ல மிதிச்சுடுவேன்” என்று மிரட்டுகிறார் ஒரு போலீசு. “என்ன புள்ளய வளர்த்து வச்சுருக்க, தூத்துக்குடியில 13 பேரை கொன்னுருக்கான், இவனை பெத்ததுக்கு நீ சாவணும்”
சம்பவம் 2 (தூத்துக்குடி இலுப்பையூரணி)
ராமர் என்பவர் மக்கள் அதிகாரம் அமைப்பின் ஆதரவாளர். ராமரின் மனைவியும் அவரின் தம்பி மனைவியும் மற்றும் அவர்களது சிறு வயது குழந்தைகளும் வீட்டில் உறங்கிக் கொண்டு இருக்கும் போது, (ஜூன் 10ஆம் தேதி இரவு 3 மணிக்கு) சுமார் 40 போலீசுக்காரர்கள் சுவரேறி குதிக்கிறார்கள். பெண்கள் உறங்கிக் கொண்டு இருக்கும் போது டார்ச் லைட் அடித்துப் பார்க்கிறார்கள். கதவுகளை ஓங்கி டமால் டமால் என்று அடிக்கிறார்கள். பதறி எழுந்த பெண்களை வெளியே வரச்சொல்லி வீடுகளுக்குள் சென்று துழாவுகிறார்கள். சுவரேறிக் குதித்து வந்த போலீசு வெளியே செல்வதற்கு கதவை திறந்து விடச் சொல்லியிருக்கிறது. “எதுக்கு இந்த நேரத்துக்கு வந்தீங்க, பகல்ல தினமும் வர்ரீங்க, பதில் சொல்றோமா இல்லையா, சுவரேறிக் குதிச்சு வர்ரீங்கலே இதெல்லாம் சரியா இருக்கா” என்று இரு பெண்களும் கேட்க, “சரிம்மா இனிமேல் கேட்டை பூட்டாம வச்சிரு நாங்க வர வசதியாக இருக்கும்” என்று தெனாவெட்டாக பேசியிருக்கிறது போலீசு. “நாங்க எல்லாம் தெருவில படுத்துக்கிறோம் கேட்சாவி, வீட்டுசாவி எல்லாத்தையும் பூட்டாம வெக்கிறோம்” என்று பதிலளித்து இருக்கிறார்கள், அந்தப் பெண்கள்.
அடுத்த இரு நாட்கள் கழித்து மாறு வேடத்தில் வந்த போலீசு “வண்டி வாடகை எடுத்துட்டு காசு தராம இருக்கான் உன் வீட்டுக்காரன், போனும் எடுக்க மாட்டேங்கிறான்” என்று காலையில் சத்தம் போட்டு இருக்கிறது. பின்னர் குழந்தைகளை கூட்டிக் கொண்டு போய் தனியே விசாரிக்க ஆரம்பித்தவுடன், போலீசுதான் என்பது உறுதிப்படுத்தியதையடுத்து கேள்வியெழுப்புகின்றனர் பெண்கள். தப்பிச் செல்கிறது, போலீசு. எப்போது போலீசு வீட்டுக்கு வருமோ என்ற பயத்தில் இரவெல்லாம் உறங்காமல் இருக்கிறார்கள் பெண்களும் குழந்தைகளும்.
“சரிம்மா இனிமேல் கேட்டை பூட்டாம வச்சிரு நாங்க வர வசதியாக இருக்கும்” என்று தெனாவெட்டாக பேசியிருக்கிறது போலீசு. “நாங்க எல்லாம் தெருவில படுத்துக்கிறோம் கேட்சாவி, வீட்டுசாவி எல்லாத்தையும் பூட்டாம வெக்கிறோம்” என்று பதிலளித்து இருக்கிறார்கள்.
இச்சம்பவம் நடந்த அடுத்த நாளில் ராமரின் வீட்டுக்கு 10 வீடு தள்ளி இருக்கும் ஜெபமாலை என்பவரை பிடித்துச்சென்று சித்தரவதை செய்திருக்கிறது. அதனால் உடலெல்லாம் காயங்கள் ஏற்படுகின்றன. அவரை ரிமாண்ட் செய்திருக்கிறது.
சம்பவம் : 3 (இடம் : ஒத்தகடை)
இப்பகுதியில் உள்ள எவர்சில்வர் பட்டறையில் பணியாற்றும் தொழிலாளரான சரவணன் என்பவரது வீட்டின் கதவை இரவு 3 மணிக்கு ஓங்கி பலமாக அடிக்கிறது போலீசு. சரவணனின் மனைவி “யார்” என்று கேட்கிறார். “போலீசு வந்திருக்கோம், கதவைத்திற என்கிறார்கள்.” “நைட் 3 மணிக்கு வந்தா கதவைத்திறக்க முடியாது, பகல்ல வாங்க” என்கிறார். ஒரு மணி நேரம் அந்த ஏரியாவையே அதகளப்படுத்திவிட்டு செல்கிறது போலீசு.
தொடர்ந்து பக்கத்து வீட்டில் சரவணனின் போட்டோவை காட்டி “யார் தெரியுமா” என்று பீதியூட்டிக்கொண்டு இருக்கிறது போலீசு.
சம்பவம் : 4 (இடம் : ஒத்தகடை)
அதிகாலை மூன்று மணிக்கு ஒத்தக்கடைக்கு அருகே உள்ள காயாம்பட்டி ஊரைச் சேர்ந்த ஒரு தொழிலாளியின் வீட்டுக் கதவைத் தட்டி, மக்கள் அதிகாரம் தோழர் முருகேசன் வீட்டைக் காட்டச் சொல்லி அழைத்துச் சென்று உள்ளனர். தோழர் முருகேசனின் துணைவியார், ” நள்ளிரவில் கதவை திறக்க முடியாது” எனக் கூறியதும், கதவை உடைக்க முயன்று உள்ளது போலீசு.
பக்கத்திலிருக்கும் தோழர் ஒருவர் வீட்டிலிருந்து கதவைத் திறந்து வெளியே வந்த தோழர் முருகேசனை. லத்திக் கம்பு, சீருடை அணிந்த 10 போலீசு மிரட்டி ஜீப்பில் ஏற்றி, அருகில் இருந்த மலம்பட்டியில் உள்ள தோழர் சதீஷின் வீட்டிற்குச் சென்று, அவரையும் கைது செய்து உள்ளனர். பின்பு பகுதியில் வாழும் பிற தோழர்களையும் கைது செய்ய தோழர் வீட்டில், உறவினர்கள் போலீசுடன் வாக்குவாதம் செய்ததால், அண்டை வீட்டு மாடிகளில் எல்லாம் ஏறி இறங்கி அனைவரையும் மிரட்டி உள்ளனர்.
வேறு உறவினர் ஒருவரை அழைத்து அவரது உறவினர்களின் வீடுகளை காட்டுமாறும், தோழரை பிடிக்க வேண்டும் எனவும் கூறி உள்ளனர். அதற்கு அவர், ” நீங்க தான் போலீசு, நீங்களே கண்டு பிடிச்சுக்கோங்க. நான் வரமாட்டேன்” என உறுதியாக பதிலளித்து உள்ளார். வேறி வழியில்லாமல் பின் வாங்கியுள்ளது போலீசு.
மற்றொரு தோழரின் வீட்டில் கதவை திறக்கச் சொன்ன போது, “ஆம்பள இல்லாத வீட்டுக்கு ஏன்யா வர்ரீங்க. காலேல பொம்பள போலீச கூட்டிட்டு வாங்க” என்று கூறி உள்ளனர். உடன், ” நாங்க ஒத்தக்கடை போலீசு தான்மா. சும்மா அவர பாக்கணும்னு தான் வந்தோம்” என நைச்சியமாக பேசி உள்ளனர். அதற்கு, “ஒத்தக்கடை போலீசா? இந்த ஊர்ல உங்கள பாத்ததே இல்லையே” என பதிலடி கொடுத்ததால், இங்கும் அண்டை வீடுகளின் மாடிகளில் தேடிச் சென்று உள்ளனர்.
அதன் பின் மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து நள்ளிரவில் தோழர்களின் வீடுகளுக்கு படை எடுத்துள்ளது போலீசு. தோழர்களின் குழந்தைகளையும் விடாமல் நள்ளிரவில், “அப்பா எங்கே?” என விசாரித்து உள்ளனர்.


தோழர் பரமன்.

சம்பவம் : 5
(இடம்: திருமங்கலம்)
பரமன் வயது 55, மக்கள் அதிகாரம் அமைப்பின் ஆதரவாளராக இருக்கிறார். இவரை கடந்த 15 நாட்களுக்கு முன் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசு ஒரு நாள் முழுக்க விசாரித்துவிட்டு தூத்துக்குடிக்கு செல்லவில்லை என்பதை தெரிந்து கொண்டு விடுவித்தது. இந்த நிலையில் 22.06.2018 அன்று காலை 9 மணிக்கு தூத்துக்குடி போலீசு 7 பேர் அவரின் வீட்டில் இருந்து கடத்திக் கொண்டு செல்கின்றனர். போலீசு வேனில் வைத்து பலமாக அடித்துள்ளனர்.

பின்னர் கண்ணில் துணியைக் கட்டி ஒரு காட்டில் இறக்கிவிட்டு துப்பாக்கியை கையால் தொட்டுப் பார்க்கச்சொல்லி அங்கேயும் அடித்துள்ளனர். “டேய் அவுசாரி மவனே இந்தத் துப்பாக்கியிலதான் உன்னை சுடப்போறோம், எங்கடா குருசாமி (உசிலம்பட்டி தோழர்)” என்று தொடர்ந்து அடித்துள்ளனர். இரவுவரை வண்டியில் தூக்கிக்கொண்டு சென்ற போலீசு பின்னர் ஒரு லாட்ஜில் வைத்து இரவு 9 வரை அடித்துள்ளனர். பிறகு திருமங்கலம் தாண்டி ஒரு காட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். கிளம்பும் போது “உன்னை பாவம்னு மன்னிச்சுட்டேன், குருசாமி போன் செஞ்சா இந்த நம்பருக்கு சொல்லு என்று” ராஜமாணிக்கம் என்ற எஸ்.ஐ. சொல்லி விட்டு சென்றுள்ளார். மகனோ இராணுவத்தில் உள்ள நிலையில் மாடு கன்றை பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ள அவரால் வீட்டை விட்டும் போக முடியாத நிலை. வீட்டில் இருந்தாலும் எப்போது வந்து போலீசு கடத்திக்கொண்டு செல்லும் என்ற நிலை.
இதுபோன்ற நள்ளிரவு தேடுதல்கள் ப‌ற்றி செய்தி அறிந்த வழக்கறிஞர் ஒருவர், ஒத்தக்கடை காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, உச்ச நீதி மன்ற உத்தரவை மீறி இது போல் வீடுகளுக்குச் சென்று மிரட்டுவது பற்றி கேட்டுள்ளார். அதற்கு, ” நாங்க யாரும் வரல சார். எங்களுக்கு தெரியாது” என கூறி உள்ளனர். அந்த வழக்கறிஞர், “உங்க லிமிட்ல தான் இப்படி நடக்குது. உங்க மேல தான் கேஸ் போடுவோம்” என கூறிய பின். “மேலிடத்து பிரஷர் சார்” என கூறிவிட்டு தொடர்பை துண்டித்து உள்ளனர்.
உறவினர்களை மிரட்டியது போலவே, தோழர்களின் நண்பர்களையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று, “ஒழுங்கா அவன் (தோழர்) எங்க இருக்கான்னு சொல்லு, இல்ல நீயும் தூத்துக்குடில கலவரம் பண்ணினன்னு கேஸ் போட்டு உள்ள தள்ளிருவேன். அப்பறம் எத்தன வருசம்ன்னு சொல்லமுடியாது” என மிரட்டி உள்ளனர். கைபேசிகளை வாங்கி சோதித்து உள்ளனர். “உள்ள போடறதுன்னா போட்டுக்கங்க சார். எங்களுக்கு ஒன்னும் தெரியாதுங்கறது தான் உண்மை” என உறுதியாக தெரிவித்து உள்ளனர். மேலும் தோழர்களின் சாதியைக் குறிப்பிட்டு அந்த அடிப்படையில் விசாரித்து உள்ளனர்.
நாம் விசாரித்தவரை, அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்ட போலீசு அனைவரும் தூத்துக்குடி, நெல்லை பேச்சு வழக்கில் பேசியதாக உறுதியாக கூறுகின்றனர்.
சில நண்பர்களை 12 மணி நேரம் வரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து உள்ளனர். தோழர் ஒருவரின் நண்பரையும் அவரது தகப்பனாரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்று 2 நாட்கள் எந்த ஒரு இடத்திற்கும் அழைத்துச் சென்று விசாரிக்காமல், வாகனத்திலேயே வைத்து ஊர் முழுவதும் சுற்றி விசாரித்து உள்ளனர்.

கைது செய்யப்பட்ட தோழர்களின் உறவினர்களையும் கைது செய்யப் போவதாக மிரட்டி உள்ளனர்.

மேலும், ஜூன் 9-ஆம் தேதி முதல் தற்போது வரை தோழர்களின் வீடுகள், உறவினர்கள் நண்பர்களின் வீடுகளை எல்லாம் நாள் முழுவதும் உளவுப்பிரிவும், மற்றவர்களும் மாறி மாறி கண்காணித்து வருகின்றனர்.
தென் மாவட்டங்களில் அறிவிக்கப்படாத போலீசு காட்டு தர்பார் நடந்தேறி வருகிறது. இந்த அடக்குமுறைகளுக்கு மக்கள் அதிகாரம் ஒருபோதும் பணியாது. தமிழக மக்கள் போலீசின் காட்டுதர்பாருக்கு விரைவிலேயே முடிவு கட்டுவார்கள்!
தகவல்:
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

நன்றி! வினவு  செய்தி பிரிவு.

1 கருத்து:

  1. நண்பரே எந்தக்கட்சியும் போராட வேண்டியது இல்லை.

    தேர்தல் வரும்போது மக்கள் காநு வாங்காமல் எல்லா கட்சிகளையும் புறக்கணித்து சுயேட்சைகளுக்கு ஓட்டுப்போடலாம் இதுவே அறவழி.

    ஆனால் தமிழகத்தில் இது நடக்காது.

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...