வியாழன் 15 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --59....





 பாலியல் பலாத்கார தேச பக்தி

............

ஹத்ராஸ் முதல் தகவல் அறிக்கையின்படி

'ஏன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தீர்கள்? 

என்று கேட்பது ஒரு தேச துரோகக் குற்றம்


ஒரு பெண் கரும்பு வயலில்

கந்தலாக கிழிக்கப்படுகிறாள்

அந்த கிராமமே

அரசாங்கத்தால் ஒரு சவப்பெட்டி போல

மூடப்பட்டு ஆணியடிக்கப்படுகிறது


'பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உடலை

ஏன் இரவோடு இரவாக எரித்தீர்கள்?" என்று கேட்பது

இரண்டு சமூகங்களுக்கு இடையே

மோதலை உருவாக்கும் செயலாக கருதப்படுகிறது


வேறொரு பெண்

தன் ' மைக்'கால் அந்த சவப்பெட்டியை

உடைத்துத்திறக்கிறாள்

மைக்கை பெண்ணின் தந்தையின்முன் நீட்டுகிறாள்

' சொல் உன் மகளுக்கு என்ன நடந்தது?'

தேசமே அந்தகுரலைக் கேட்கிறது


அந்தப்பெண்ணின் தந்தைக்கு

ஐம்பது இலட்சம் ரூபாய் இலஞ்சமளித்து

அரசாங்கத்திற்கு எதிராகத் தூண்டியதாக

முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது


14 நாட்களுக்குப்பின் 

"அந்தப்பெண்ணின் யோனியில்

விந்தணுக்கள் இல்லை

எனவே பலாத்காரம் நடைபெறவில்லை" என

கைகளை அவர்கள் கழுவ முயற்சிக்கும்போது

' இல்லை அந்த பதிநான்கு நாட்களில்

அந்தப்பெண் பலமுறை சிறு நீர் கழித்தாள்

அதில் விந்தணுக்கள் கழுவப்பட்டிருக்கலாம்' என

யாரோ எழுதுகிறார்கள்


அவர்கள் சாதிக் கலவரத்தை தூண்டுகிறார்கள் என

வழக்குப்பதிவு செய்யப்படுகிறது


நடந்தது ஒரு முன் விரோத தாக்குதல் மட்டுமே என

அவர்கள் எல்லாவற்றையும் 

மூட முயற்சித்தபோது

அந்தப்பெண் மரண வாக்குமூலத்தில்

"இல்லை.. என்னை வன்புணர்வு செய்தார்கள்

மேலும் என் முதுகுத்தண்டை உடைத்து

நாக்கை துண்டித்தார்கள்" என கூக்குரலிடுகிறாள்

இந்தக் கூக்குரலுக்கு நீதிவேண்டும் என

சிலர் தெருவுக்கு வருகிறார்கள்


அன்னிய நாட்டு சதியால்

அரசைக் கவிழ்க்கும் முயற்சி இது என சொல்லப்படுகிறது


நாட்டின் அரசர் ஏன் மெளனமாக இருக்கிறார் என

ஒரு தலைவன் கேட்கிறான்

அவனது நெஞ்சில் கைவைத்து கீழே தள்ளுகிறார்கள்


கேள்வி கேட்பவர்கள் அனைவரும்

இந்த தேசத்தின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பவர்கள் என

எப்.ஐ.ஆர் கூறுகிறது


ஒரு பெண் நிரந்தரமாக மெளனமாக்கப்பட்டிருக்கிறாள்

அவளுக்கு நடந்ததற்கு ஒரே சாட்சி

அவளது உடல் மட்டுமே

அந்த உடல் அழிக்கப்பட்டு விட்டது

யாரைப் பாதுகாக்க விரும்புகிறீர்கள் 

என்ற கேள்வி உரத்து ஒலிக்கிறது


அந்தக் குரல்கள் அமைதிக்கு

பங்கம் விளைவிக்கும் குரல்கள் என

குற்றம் சாட்டப்படுகிறது


இப்படியாக

இந்த தேசமே

தேச விரோதிகளால் நிரம்பியிருக்கிறது


சரி தேசபக்தி என்பதுதான் என்ன?

தேசபக்தி என்றால்

ஒரு பெண்னை கரும்பு வயலில் வைத்து

பலாத்காரம் செய்வது

14 நாட்களுக்குப் பின்

அவள் உடலில் விந்தணுக்கள் இல்லையேயேன்

என்று குரூரமாக கேட்பது

அவள் முதுகுத்தண்டை உடைப்பது

அவள் நாக்கை துண்டிப்பது

யாருக்கும் தெரியாமல் அவள் உடலை

பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தி விடுவது


இந்த தேசத்தின் மகள்களின்

கிழிக்கப்பட்ட உடல்களிலிருந்து

இந்த தேசத்தின் பெருமிதம் உயர்ந்துகொண்டிருக்கிறது



மனுஷ்ய புத்திரன்

2 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...