வெள்ளி 12 2014

ஆறு வாழைப்பழத்தை 167 பேருக்கு பிரித்து கொடுத்த சிறைக்கதை!!!

சிறையில் அடைப்பதற்கு முன்னால் அனைத்து கைதிகளையும் ஜட்டி வரை கழட்டி பரிசோதனை செய்து அங்க அடையாளங்களை குறித்துக்கொள்வது தான் சிறை வழக்கம். நமது தோழர்களையும் அப்படி உடைகளை கழட்டச் சொன்னார்கள், ஆனால் முன்னணியாக நின்ற தோழர்கள், “நாங்கள் கிரிமினல்கள் இல்லை அரசியல் கைதிகள் எனவே உடைகளை எல்லாம் கழட்ட முடியாது” என்று கூறியதோடு, “யாரும் சட்டை பட்டனைக் கூடக் கழட்டக் கூடாது” என்று கூறிவிட்டனர். “மச்சம் தானே வேணும் இதோ பார்த்துக்க”ன்னு ஒவ்வொருவரும் தமது அடையாளங்களை காட்டினோம். உடைகளை கழட்ட மறுத்ததும், “ஐயா, சட்டையை கழட்ட மாட்டேங்கிறாங்கய்யா”ன்னு ஜெயிலரிடம் போய் முறையிட்டனர், ஜெயிலர் வந்தார்.

“நீங்கல்லாம் என்ன அமைப்புப்பா” என்றார்.
“பு.ஜ.தொ.மு” என்றோம்.
“ஓ.. ம.க.இ.க வா! சரிய்யா, இவங்க கம்யூனிஸ்டுகள் இவங்களை சட்டையை எல்லாம் கழட்டாம அப்படியே அடையாளத்தை குறிச்சிக்கங்க”ன்னு சொன்னார். இந்த முதல் சம்பவமே எங்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சிறையில் அடைக்கப்பட்டோம். முதல் நாள் இரவு குடும்பத்தை நினைத்து ரொம்ப கஷ்டமா இருந்தது. பல தொழிலாளிகள் மிகவும் மன வருத்தத்தில் உடைந்து போகும் நிலையில் இருந்தாங்க. நானும் அப்படி தான் இருந்தேன் பிறகு எப்படியே தூங்கிவிட்டேன். மறுநாள் காலை 6 மணிக்கு எழுந்தோம். முன்னணியாக இருந்த தோழர்கள் 167 பேரையும் சுகாதாரக் குழு, மருத்துவக் குழு, உணவுக் குழு, குடிநீர் குழு, விசாரணைக் கைதிகளை சந்திப்பதற்கான குழு, தொண்டர் குழு என்று ஆறு குழுக்களாக அமைத்தனர். ஒரு குழுவுக்கு 10 தோழர்கள் இருந்தனர். இந்த குழுக்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்பட்டன.
எனக்கு சிறை அனுபவம் புதிதாக இருந்ததால், என்னடா இது சிறைக்குள்ள வந்தும் குழு அது இதுன்னு பண்ணிக்கிட்ருக்காங்களேன்னு தோணிச்சி. ‘நாம ஒரு போராட்டத்தில் கலந்துகிட்டு கைதாகி வந்திருக்கோம், ரெண்டு நாள்ல வெளிய போகப் போறோம், ஏதோ நிரந்தரமா இங்கேயே தங்குறதுக்கு ஏற்பாடு செய்ற மாதிரி குழுவெல்லாம் அமைக்கிறாங்களே’ன்னு கொஞ்சம் எரிச்சலாவும் கூட இருந்துச்சி, பிறகு தான் அது எவ்வளவு சரியானது என்பதை புரிஞ்சிக்கிட்டேன்.
அமைப்பு கூட்டங்களுக்கும், பிரச்சாரங்களுக்கும் செல்லும் போது தோழர்கள் புதிய ஜனநாயக சமூக அமைப்பைப் பற்றி விளக்குவார்கள். புதிய ஜனநாயக அரசில் நாம் தான் அரசு, நாம் அமைப்பதுதான் அரசாங்கம். மக்கள்தான் அரசை நடத்துவார்கள். அந்த அரசில் ஒவ்வொரு குடிமகனும் தலைவனாக இருப்பான். மக்கள் கூட்டாக உழைப்பார்கள், உழைப்பவர்களுக்கு தான் உரிமைகளும் அதிகாரமும் இருக்கும், மக்களைச் சுரண்டுபவர்கள் கொள்ளையடிப்பவர்களுக்கு அதிகாரம் இருக்காது, இப்படித்தான் சீனாவில் மாவோ தலைமையிலான சீன அரசு இருந்தது என்று விளக்கும்போதெல்லாம் அதைப் பற்றி ஒன்றும் புரியவில்லை. ஆனால் சிறையில் இந்த ஏழு நாட்களில் நாங்கள் 167 பேரும் ஒரு குட்டி அரசாங்கமாகவே இயங்கினோம். நாங்கள் குழுக்களாக இயங்கியது போலத் தான் புதிய ஜனநாயக சமூக அமைப்பும் இயங்கும், ஆனால் அது இதை விட பிரம்மாண்டமாக கோடிக்கணக்கான குழுக்களைக் கொண்டு இயங்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்.
இனிமேல் சிறையில் கற்றுக்கொண்ட ஒழுங்கு முறைகளை எனது குடும்பத்திலும் அமுல்படுத்துவேன். இந்த மாதிரியான முறைகளை கடைபிடித்தால் ஒரு குடும்பத்தின் பொருளாதார தேவைகளை எவ்வளவோ குறைத்துக் கொள்ள முடியும், முறைப்படுத்திக் கொள்ள முடியும். ஒரு குடும்பத்திற்கு பொருந்துகின்ற இந்த முறைகள் ஒரு நாட்டிற்கு ஏன் பொருந்தாது? இதை ஒரு நாட்டிற்கு பொருத்தினால் அந்த நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். உண்மையில் உழைக்கும் மக்களுக்கான ஒரு அரசை நம்மால் கட்டியமைக்க முடியும், அதை நாமே நிர்வாகம் செய்யவும் முடியும் என்கிற உறுதியான நம்பிக்கையை இந்த சிறை அனுபவம் தான் எனக்கு அளித்தது.
உதாரணத்திற்கு பார்த்தீங்கன்னா தினமும் வெவ்வேறு தொழிலாளர்களின் உறவினர்கள் வந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சில நாட்கள் உறவினர்கள் குறைவாக வருவார்கள், உணவுப் பொருட்களும் குறைவாக வரும். அப்படி ஒரு நாள் மொத்தமே ஆறு வாழைப்பழங்கள் தான் வந்தது. சரி இந்த ஆறு வாழைப்பழத்தை எப்படி 167 பேருக்கு பிரித்து கொடுக்கப்போறாங்கன்னு பார்ப்போமேன்னு நான் உள்ளுக்குள் கிண்டலாக நினைத்துக்கொண்டு காத்திருந்தேன். ஆனால் தோழர்கள் அதையும் 167 பேருக்கு பகிர்ந்தளித்தனர். தனியாக நின்று யோசித்தால் என்னடா இது முட்டாள்தனமா இருக்கு, 167 பேருக்கு ஆறு பழம்னா தோல் கூட கிடைக்காதேன்னு தான் தோணும், ஆனால் உண்மை அப்படி இல்லை. கூட்டாக சிந்திக்கும் போது, கூட்டாக உழைக்கும் போது அனைத்தையும் செய்ய முடியும் என்பதையும் இதில் கற்றுக்கொண்டேன் என்றார்.தோழர் அசோக்குமார் :

http://www.vinavu.com/2014/09/10/prison-experience-strengthens-gsh-workers/
நன்றி! வினவு.


8 கருத்துகள்:

  1. தோழர் அசோக் குமாரின் சிறை அனுபவம் சிந்திக்க வைக்கிறது !
    த ம 1

    பதிலளிநீக்கு

  2. எல்லாமே ஒவ்வொரு விசயத்தை கற்றுத்தரும் என்பது உண்மைதான் நண்பரே,,,

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொருத்தரின் சிறை அனுபவமும் சிந்திக்கத்தான் வைக்கிறது ஜீ

    பதிலளிநீக்கு
  4. ஒவ்வொருத்தரின் சிறை அனுபவமும் ஒவ்வொரு விசயத்தை கற்றுத் தருவதால்தான் அதை பதவிட்டு இருக்கிறேன் நண்பரே!!!

    பதிலளிநீக்கு
  5. சிறை அனுபவம் நம்ம வலிப்போக்கனுடையது என்று தான் நான் முதலிலே நினைச்சிருந்தேன். அப்புறம் அது வேறு ஒருவருடையது என்று தெரிஞ்சிடுச்சு. மிகவும் நல்ல பயனுள்ள தகவல் நன்றி.
    இவைகள் ஒரு குடும்பம்பமென்று வரும் போதோ அல்லது ஒரு குழு என்று வரும் போதோ சிறப்பா பொருந்தும்.
    ஆனா ஒரு நாடு நாட்டின் ஆதிகாரம் என்று இதை ஒரு நாட்டிற்கு பொருத்தினால், இது மக்களுக்கு எதிரான கொடுமைகள் செய்கின்ற சர்வாதிகரமாக மாறிடும் என்பதையே வரலாறு எமக்கு திரும்ப திரும்ப கற்பித்துவந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  6. வலிப்போக்கன் சிறை சென்றதெல்லாம் தனியாகத் சென்று இருக்கிறார். அதன் அனுபவங்களைபற்றி சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார். விரைவில் பல தடவை சிறை சென்ற எல்லாவகையான அனுபவங்களை பதிவிடுவார்.

    பதிலளிநீக்கு
  7. விரைவில் பல தடவை சிறை சென்ற எல்லாவகையான அனுபவங்களை பதிவிடுவார்.

    நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி!!!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...