சனி 21 2017

ஒரு தனியார் பள்ளியின் விழாவில்.....




சமீபத்தில் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளிக்குப் பேசப் போயிருந்தார் அவர்..பேசுவதற்கு முன்னால் ஒரு அறையில் உட்கார வைத்திருந்தார்கள். அவர்  பக்கத்தில்  அமர்ந்திருந்த  தமிழ் டீச்சர். 

சார் எங்க students சூப்பரா கவிதை எழுதியிருக்காங்க படிக்கிறீங்களா?' என்றார். 

பேசப் போகும்     அவருக்கும் பொழுது போகனுமே ,கொடுங்க' என்றார்..

 அந்த டீச்சர்  பெருமையோடு மூன்று கவிதைகளை எடுத்து வந்தார். 'நிலா' ன்னு தலைப்பு கொடுத்திருந்தோம் சார். இவங்க மூணு பேரும் சூப்பரா எழுதியிருந்தாங்க '

'எந்த வகுப்பு படிக்கிறார்கள்?  ' என்றார்.

 '6 லிருந்து 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சார் '.

' ஏன் 9th to 12 th என்னாச்சு?

 'அவங்களை ஸ்டடிஸ்ல  மட்டும் concentrate பண்ணச் சொல்லி பிரின்ஸிபால் மேடம் சொல்லிட்டாங்க சார்

 'சாப்பிடவாவது விடுவீங்களா?' 

அவருடைய கிண்டல் அவருக்குப் புரியவில்லை.

 'நல்ல ஹெல்த்தி அண்டு ஹைஜீனிக் ஃபுட் தரச் சொல்லி பேரன்ட்ஸ ஃபோர்ஸ் பண்றோம் சார். but அவங்க சரியா கோ ஆபரேட் பண்ண மாட்டேங்குறாங்க சார் '
சீரியஸாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்

.கவிதைகளைப் புரட்டினார். மூன்றில் ஒன்று பாரதிதாசன் கவிதை 'நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து '.இன்னொன்று 'வண்ணதாசனின்'நிலா பார்த்தல்.மூன்றாவது கவிதையும் சொந்தக் கவிதையில்லை.யாரோ ஒரு உள்ளூர் கவிஞர் எழுதித் தந்ததாயிருக்கும் என்று மட்டும் ஊகித்தார்.

 டீச்சரிடம் 'வண்ணதாசன் கவிதை படித்ததில்லையா?' கொஞ்சம் கோபமாகக் கேட்டார். 

அவர் ரொம்ப அப்பாவியாய் 'யார் சார் அது? ' என்று வினவவும் சிரிப்பு வந்து விட்டது.

 பாரதிதாசனின் 'நீலவான் ஆடைக்குள் கூட படித்ததில்லையா?

 'பாரதிதாசன் தெரியும் சார்.  அவர் பாவேந்தர். புதுச்சேரியில் பிறந்தவர். குயில் என்ற இலக்கிய  இதழை நடத்தியவர். 1964 ல் இறந்தார். இது அவர் கவிதையா?  படிச்சதில்ல சார் ' என்றார்.

 நீங்க  எங்க படிச்சீங்க 'என்று கேட்டார். ' 

 'கரஸ்ல சார். ட்வெல்த் முடிச்சதும் கல்யாணம் ஆயிருச்சு. வீட்டுக்காரர் வாத்தியார் சார். அவர்தான் சொன்னாரு,தமிழ்  எடுத்தா கஷ்டப்படாம டிகிரி வாங்கிடலாம்னு.அதான் சார் எடுத்தேன். ஆனால், ஸ்கூல் படிக்கறப்பல்லாம் எனக்கு தமிழ்னா அலர்ஜி சார் ' என்றார்

அவர் ஒரு நிமிடம் அரசுப்பள்ளிகளின் தரமின்மை குறித்து பொளந்து கட்டும் சில  அறிவுஜீவிகளை நினைத்துக் கொண்டார். 

'ஒரு உதவி செய்றீங்களா?நீங்க ரிஜக்ட் பண்ணிய கவிதைகளை எடுத்துட்டு வர்றீங்களா?என்று கேட்டார் ' '


' எதுக்கு சார் '

'பொழுது போகனும்ல'எனக்கு என்றார்

'ஓகே சார் '

ஒரு கட்டைக் கொண்டு வந்தார். 20 கவிதைகள் இருக்கும். பெரும்பாலான மாணவர்கள் நிலா நிலா ஓடி வா' பாடலையே எழுதி வைத்திருந்தனர். அதையே ஒருவன் வித்தியாசமாக  எழுதியிருந்தான்.

'நிலா நிலா ஓடி வா!
ஜீன்ஸ் பேன்ட் கொண்டு வா!
ஜிப்பு போட்டு கொண்டு வா!
நடு வீட்டில் வை
மிஸ் வந்தா பொய் '

அதை எடுத்து  ஓரமாக வைத்தார். அந்தத் 'தமிழரசி ' இதைக் கவனித்தார். 

'பெரிய அராத்து சார் இவன் .கவிதையை வகுப்பில் வச்சு வாசிச்சு காட்டி நல்லா திட்டி விட்டுட்டேன் '

'ஆமா, தீவிரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிஞ்சுடனும் இல்லையா,?என்றார்

அவர் அதற்கும் ' எஸ் சார் '  என்றார். 

மற்றொருவன்

'நிலா 
உலா 
பலா 
கலா 
டீலா நோ டீலா? ' 

என்று முடித்திருந்தான்.டிஆரின் தாக்கம் இந்தத் தலைமுறை வரை நீடிப்பதைக் கண்டு வியந்தார். 

' வானத்தில் 
யாரோ 
ஆப்பம் 
சுட்டு வைத்திருக்கிறார்கள்;
மனிதர்கள் 
தூங்கி விட்டார்கள்; 
விண்மீன் பூச்சிகள் 
தின்ன வருகின்றன '
என்று  ஒரு கவிதை.- இதையும் ஓரமாக வைத்தார்.. 

'இதுவும் அராத்துதான் சார்! ஆனா என்ன கொஞ்சம் நல்லா படிப்பான். அதனால திட்டு வாங்கறதில்ல'

கடைசியாக  ஒரே ஒரு கவிதை எஞ்சியிருந்தது. 

'நிலா 
வானத்தில்;
அம்மா 
என் மனதில்; 
அம்மா 
சோறு தருவாள்; 
ஆனால், 
நிலா 
இருந்தால்தான் பசிக்கும். 
நிலா 
போனால் 
வந்து விடுகிறது
அம்மா? '

சட்டென்று மனம் கலங்கியது அவருக்கு.. இது ஒரு நல்ல கவிதை இல்லைதான். ஆனால், கவிதைக்கான ஏதோ ஒரு விதை இதை எழுதிய கரங்களுக்குள் ஒளிந்திருப்பதாகவே உணர்ந்தார்
'எனக்கு இன்னொரு உதவி செய்யுங்க! பரிசு வாங்குன மூணு பேரை முதலில் வரச் சொல்லுங்க!  அவங்க போனப்புறம் இதை எழுதுன பொண்ண வரச்சொல்லுங்க என்று விட்டு .பேப்பரை தமிழரசியிடம்' கொடுத்தார். 

'பிரின்ஸிபால் கிட்ட கேட்டுட்டு கூட்டி வர்றேன் சார்' என்றார்

அவர் பிரின்ஸிபால் அனுமதித்த பிறகுதான் முதலிரவு அறைக்குள் கூட போயிருக்கக் கூடும். என்று நிணைத்தார்

அந்த மூன்று பிள்ளைகளும் வந்தார்கள். மூவர் முகத்திலும் கொஞ்சம் பணக்கார களை. இயல்பாக இருந்தது. வரவழைக்கப்பட்டவர்களில். மூவரில் இரு சிறுமிகள்; ஒரு சிறுவன். இரண்டு பேரும் சீக்கிரமாகவே ஒத்துக் கொண்டார்கள். ஒரு சிறுமியின் சித்தப்பா தமிழ்ப்பேராசிரியராம்.இன்னொரு சிறுமியின் அத்தை தமிழ் ஆர்வம் கொண்ட மேத்ஸ் டீச்சர்(அவர்தான் வண்ணதாசனை கடத்தி வந்து தன் மருமகளிடம் ஒப்படைத்திருக்கிறார்).

பையன் லேசில் ஒத்துக் கொள்ளவில்லை.'என் கவிதைதான் இது ' என்று  அடம் பிடித்தான்.' சரி, அந்தக் கவிதை என்ன சொல்லுதுன்னு சொல் பார்ப்போம் 'என்றவுடன்  அந்தக் கவிதையை பார்க்காமல் அப்படியே ஒப்பித்தான்.

'தலைவா நான் கேட்டது மீனிங் '

இப்போது லேசாய் தலை கவிழ்ந்து நின்றான். 

அவன் அப்பா தாசில்தார். அவர் ஒரு தமிழாசிரியரைப் பிடித்து, அந்தத் தமிழாசிரியர் ஒரு உள்ளூர் கவிஞரைப் பிடித்து  இந்தக் கவிதையை வாங்கி வந்து  அவனிடம் தந்திருக்கிறார்  (தந்தை மகற்காற்றும் உதவி)

'உங்களுக்கு கவிதை வரலைல. நீங்க  ஏன் கவிதை போட்டில சேர்ந்தீங்க? கொஞ்சம் கோபமாகக் கேட்டார். 

'மிஸ் தான் கண்டிப்பா சேரச் சொன்னாங்க 'மூவரும் கோரஸாகச் சொன்னார்கள். 

'இல்ல சார், நல்லா படிக்கிற புள்ளைகண்ணா கவிதை எழுதிட்டு வந்துரும். அதான் இவங்களை ஃபோர்ஸ் பண்ணினேன் 'என்றார் தமிழரசி

'நல்லா படிக்கிற புள்ளைகளுக்குத்தான் கவிதை வரும்ம்னு உங்க கிட்ட சொன்னது யாரு?  என்று கேட்டார் 

' பிரின்ஸிபல் சார் '

அப்போது அந்தச் சிறுமி உள்ளே வந்தாள். கீழ்நடுத்தரக் குடும்பம் என்பது பார்த்த  உடனே தெரிந்தது. பெற்றோர்களின் டவுசரையும் உருவிக் கொண்டு திருப்பியனுப்பும் இந்தப் பள்ளியில் இவளைச் சேர்த்ததற்காக இவள் அப்பா யாரோ ஒருவனுக்கு கண்டிப்பாய் கடன்காரனாகியிருப்பார்.என்று......

'அம்மா என்ன செய்றாங்க?' அவள் கைகளைப் பற்றியபடி கேட்டார்.. 

'செத்துப் போயிட்டாங்க சார் '

அவள் அழுகையை மென்று முழுங்குகிறாள் என்பது தெரிந்தது.
' எப்ப? 

அவர்  குரலும் லேசாக  உடைந்திருந்தது. 

'போன மாசம். தீ வச்சுக்கிட்டாங்க'

அவர் ஏன் என்று கேட்கவில்லை. 'தமிழரசிக்கும்' அது அதிர்ச்சியாய் இருந்திருக்க வேண்டும்.  அவருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்காது. இதையெல்லாம் பிரின்ஸிபல் கேட்கச் சொல்லியிருக்க மாட்டார். 

'கவிதை உன்னுதா? பேப்பரைக் காட்டிக் கேட்டார்.. 

'சத்தியமா என்னுது சார் 'ஒரு கையை இன்னொரு கையின் மேல் வைத்துச் சொன்னாள்.

.'நல்லா இருக்கு. ....கவிதையெல்லாம் படிப்பியா?'

'தமிழ் புக்கில் உள்ள கவிதையெல்லாம் மனப்பாடமா தெரியும். அப்பப்ப தோணுறத நோட்டில் எழுதி வைப்பேன் '

பரிசு பெற்ற மூன்று கவிதைகளையும் அவளிடம் நீட்டினார். 

'இதைப் படி '

'சார், இந்தக் கவிதை எனக்குத் தெரியும் '
'
எங்க படிச்சிங்க..”

படிக்கல சார். டிவில போட்ட பட்டிமன்றத்தில் கேட்டேன். பாரதிதாசன் எழுதுனது '

அவர் ஒரே ஒரு நிமிடம் திருப்பி தமிழரசி  டீச்சரைப் பார்த்தார்.. 

மற்ற  இரு கவிதைகளையும் படித்தாள். இடையிடையே நிறைய சந்தேகம் கேட்டாள். 
'கவிதை என்ன சொல்லுது 'என்று கேட்ட போது கிட்டத்தட்ட சரியாகவே சொன்னாள். 

அவர் டீச்சரிடம் சொன்னார். 

'இந்தப் பொண்ணுக்குத்தான் ஃபர்ஸ்ட் கொடுக்கனும் '

'சார், பிரைஸ் லிஸ்ட் ஏற்கனவே பிரிப்பேர் பண்ணியாச்சு ' என்று தமிழரசி டீச்சர் 'பதட்டத்தோடு பதில் சொன்னார். 

'மந்திரிகள் பேரையே  தமிழ்நாட்ல  அடிச்சு அடிச்சு எழுதுறாங்க.  இதுவா கஷ்டம்? என்றவர்.  நான் சொன்னேன்னு பிரின்ஸிபல் கிட்ட சொல்லுங்க 'என்றார்

'ஓகே சார் ' 

'தமிழரசி ' முதல்வர் அறையை நோக்கி நடந்தார். அந்தச் சிறுமி என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தாள். 

'சார்,நான்தான் ஃபர்ஸ்டா?'என்று கேட்டாள் சிறுமி..

அந்தக் குரலில் அப்படி ஒரு சந்தோஷம். அந்த முகத்தில் ஒட்டிக் கிடந்த நெடுநாள் சோகம் இப்போதுதான் இந்த  அறையில் உடைந்து சிதறியிருக்க வேண்டும். 

'ஆமா ' என்று அவரும் பூரிப்போடு சொன்னார்.

'சார் நான் அப்ப  அகமது, ஜெயந்தி கிட்ட நான்தான் ஃபர்ஸ்ட்ன்னு சொல்லிடவா? '

அகமது  ஜெயந்தி.... 'யார் அவங்க'.....

'என் ஃப்ரெண்ட்ஸ் ' சார்...

அவள் அந்த  அறையிலிருந்து வெளியேறவில்லை. கிட்டத்தட்ட பறந்து போய்க் கொண்டிருந்தாள்.

அந்த   விழாவில் அவர் பேசி முடித்து விட்டதும்். டிஎஸ்பி விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிக் கொண்டிருந்தார். இலக்கியப் போட்டிகளுக்கு அவர்தான் பிரிசு வழங்க வேண்டும். அந்தச் சிறுமிக்கு கை தட்டு கிடைக்கப் போகும் தருணத்தைக் காண ஆவலாயிருந்தார்.. 'கவிதைப் போட்டி 'என்று மைக்கில் அறிவித்த.  உடனே முன்னால் ஒரு பலூன் உடைந்து சிதறியதைப் போல் இருந்தது அவருக்கு... நிகழ்ச்சிக்கு முன்பு கொடுத்த  லிஸ்டில் இருந்த,  அறையில் வைத்துப் பார்த்த  அந்த மூவரும்தான் அவரிடம்  பரிசு வாங்கிப் போனார்கள்.அவர்களின் முகங்களில் எந்தக் குற்ற உணர்ச்சியுமில்லை. அவரை  விட  அழகாக ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள்.

அவர் 'தமிழரசியை'சைகையால் அழைத்தார். அவர் பேசுவதற்கு  முன்னால் அவரே அவசரமாக 'சார் நீங்க சொன்னத பிரின்ஸிபல்கிட்ட சொல்லிட்டேன் சார்  என்றார்' அம்பை நொந்து என்ன பயன்?பிரின்ஸிபல் அவர் பக்கத்தில்தான் உட்கார்ந்திருந்தார்.

 'மேடம்! தமிழ் மேடம் கவிதை போட்டி ரிசல்ட் பற்றி உங்க கிட்ட சொன்னாங்களா?

'சொன்னாங்க சார் ' அகலமாய் புன்னகைத்தார். 

'பிறகு ஏன்? '   கோபத்தில் அவருக்கு  உடல் படபடத்தது.

'கரெஸ்பான்டன்ட் ஆர்டர் சார்'

மீண்டும் அதே அகலமான  புன்னகை. இது மற்றொரு அம்பு.
அவருக்கு ரொம்ப தவிப்பாய் இருந்தது. அவர் முன்னாலிருந்த அந்தக் கூட்டமே சிறுமியின் கண்களாய் மாறி அவரை துளைப்பதாய் உணர்ந்தார். 

அகமதுவும்,ஜெயந்தியும் அவளைப் பற்றி என்ன நினைத்திருப்பார்கள்?'போடி பொய் புளுகணி'என்று  அந்தக் குழந்தையிடம் பேசாமல் விலகிப் போய் விடுவார்களோ?அவர் பார்த்தே இராத அவள் அம்மா எரிந்து விழுந்த காட்சி ஒருகணம் அவர்  கண்களில் வந்து போனது. அவருக்கு முன்னால் பரிசு வாங்கிய  அந்த மூவரும்' இந்தியாவின் எதிர்காலமே அவர்கள்தான் 'என்ற பாவத்துடன் அடக்க ஒடுக்கமாக அமர்ந்திருந்தனர்.'தேசிய கீதம் ' என்று யாரோ சுரத்தில்லாமல் அறிவிக்க எல்லோரும் எழுந்து நின்றார்கள்.  அவரும்தான் எழுந்து நின்றார்

நன்றி! மானசீகன்...

5 கருத்துகள்:

  1. வேதனை
    வேதனை
    மனம் கனக்கிறது நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  2. எனது கருத்து இன்னும் வரவில்லையா.....

    பதிலளிநீக்கு
  3. மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலையே படாத சமுதாயம் உருவாகிக்கொண்டிருக்கிறது. லட்சங்களில் லஞ்சத்தைக் கொட்டி வாங்கும் வேலைகளில் இந்த ஆசிரியப்பணியும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  4. அருமை உண்மையில் நடப்பது இதுவே!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...