![]() |
| படம்..மக்கள் உரிமை பாதுகாப்பு மையம். |
அருமைச் சகோதரர்க்கு,
வணக்கம், தங்கள் நலம்
எங்கள் நலம் விசாரிக்கவும்
தெரிவிக்கவும் முடியாமைக்கு
மன்னிக்கவும்...... என்ன
இந்த அர்த்த ராத்திரியில்
போன் என்று தாங்கள்
பதற வேண்டாம் நேரடியாக
விசயத்தை சொல்லி விடுகிறேன்.
கௌவரக் கொலையிலிருந்து
தப்பித்த நாங்கள் ஆணவக்
கொலையிலிருந்து தப்பிக்க
முடியுமா...????சகோதரா..
அவரைவிட எனக்குத்தான் பயமும்
பதற்றமும் அதிகரிக்கத் தொடங்கி
இருக்கிறது...வளர்ந்து விட்ட
குழந்தைகள் இருந்த போதும்
ஆணவக் கொலை நடக்காது
என்று என்னவர் சமாதானம்
சொன்னாலும் என் மனம் நிம்மதி
கொள்ள மறுக்கிறது சகோதரா....
அடுத்த வேளை கஞ்சிக்கு
செத்தவனிடம் கூட சாதி வெறி
தலைக்கேறி விட்டது சகோதரா...
காசுள்ளவன் தன் சாதிகாரனுக்கு
எந்த உதவி செய்யாவிட்டாலும்
சாதி பெருமை காக்க எந்த இழி
செயலும் செய்ய தயங்குவதில்லை
ஆட்சியும் போலீசும் அவனுக்குத்தான்
பக்கபலமாய் இருக்கிறது சகோதரா....
கறையான் புற்றெடுக்க கருநாகம்
புகுந்த கதையாக..எந்த புற்றில் எந்த
சாதிவெறி பாம்பு இருக்கும் என்பது
எனக்கும் அவருக்கும் தெரியவில்லை
எனதருமைச் சகோதரா......
சாதிக்கு எதிரான எங்கள் காதலை
வழ வைத்த எனதருமைச் சகோதரா
கௌவரக் கொலையிலிருந்து எங்களை
காத்ததுபோல.. ஆணவக் கொலையிலிருந்தும்
எங்களைக் காத்து வாழ வைக்க
வேணும் எனதருமை சகோதரா....
![]() |
| ஜட்டியோடு இவர்களை நிறுத்துவது என்பது இங்கு நிலவும், கோபத்தை மட்டுப்படுத்தும் போலீஸ் தந்திரம் இது. |

