இந்த வழக்கிற்கான சிறப்பு விசாரனை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி செல்வம் இல்லத்தில் நடந்தது.
அப்போது அம்மாவின் ஏவல் போலீசு, தோழர் கோவன் சார்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்திற்கு பணம் எங்கிருந்து வருகிறது?, இதன் உறுப்பினர்கள் யார் யார்? இவர்களுக்கும் தடை செய்யப்பட்ட அமைப்புக்கும் தொடர்பு உள்ளது போன்ற அடிப்படை ஆதாரங்கள் இல்லாத அவதூறுகளை கூறி, மீண்டும் விசாரிப்பதற்கு போலீசு காவல் கேட்டது.
நமது தரப்பில் மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு ஆஜரானார். மக்கள் கலை இலக்கிய கழகம் வெளிப்படையாக இயங்கும் அமைப்பு. தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல! அடிப்படை ஆதாரம் இல்லாமல், போலீசு விசாரணைக்கு அனுமதித்தது தவறு என்று வாதாடினார்.
இதற்கு நீதிபதி, போலீசை பார்த்து ஏற்கனவே ஒரு நாள் போலீசு காவலில் விசாரித்தீர்களே ஏதாவது விவரம் கிடைத்துதா? என்றார்.
”இல்லை” என்றார்கள்.
”கோவன் இருக்கும் ம.க.இ.க. தடை செய்யப்பட்ட அமைப்போடு தொடர்பு இருக்கு என்று கூறுகிறீர்கள் அதை பற்றிய ஆதாரங்களாவது இருக்கா ?” என கேட்டார் நீதிபதி.
அதற்கான ஆதாரங்களும் இல்லை என்று ஜெயாவின் போலீசு தலையை சொரிந்தது.
மேலும் மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்புவின் கூர்மையான வாதத்தால் போலீசு பதில் இல்லாமல் பேதலித்து போய் நின்றது.
நீதிபதி, போலீசு காவல் தேவை இல்லை என்று எழும்பூர் கீழமை நீதிமன்ற போட்ட இரண்டு நாள் உத்தரவை தடை செய்தார்.
அந்த உத்தரவிலேயே இந்தக் கைது செல்லாது என்பதற்குரிய விளக்கங்கள் இருந்தன. அதன் தொடர்ச்சியாக சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் பிணை அளித்தது.
***
‘டாஸ்மாக் மூடு’ என்ற பாடலுக்காக தேச துரோக வழக்கு என்ற காரணம் பிசுபிசுத்து போனது. இந்த கொடிய அடக்குமுறை, பாசிச ஜெயவின் வக்கிர கொடுங்கோல் ஆட்சியை உலகறியச் செய்துள்ளது.
டாஸ்மாக் என்பது தமிழக மக்கள் மீது ஜெயா அரசு தொடுத்து இருக்கும் யுத்தம். சசிபெருமாள் படுகொலை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்ச்சி தான் தோழர் கோவன் கைது.
ஈழ இறுதிகட்ட போரில் சிங்கள இராணுவம், அப்பாவி தமிழ் மக்கள் மீது கொத்து குண்டுகளை வீசி கொன்றது போல இந்த ஜெ அரசு டாஸ்மாக்கை நம் மீது ஏவியுள்ளது. இந்த பேரழிவின் தாக்கம் பல பரிமாணங்களில் இருக்கிறது. மழலை மாறாத சிறுவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என்று சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் குடிபழக்கத்துக்கு அடிமைப்படுத்தியது. குடிப்பது என்பது சமூக அந்தஸ்து என்ற நச்சு கலாச்சரத்தை இவர்களிடம் விதைத்துள்ளது.
டாஸ்மாக்கின் கொடுங்கரத்தின் பாதிப்பு என்பது ஆளுமை சிதைவு, தற்கொலை, சாலை விபத்து, பாலியல் வன்கொடுமை, மாணவர்கள் கல்வி பாதிப்பு, ஆதரவு அற்றவர்கள் அதிகமாகுதல், குடித்த கணவர்களால் வீட்டில் பெண்களுக்கு சித்ரவதை, கணவரை இழந்த கைம்பெண்கள் , குடும்ப பொருளதார பிரச்சனைகள், உச்சமாக குடும்ப உறவே சீரழியும் நிலை என நீண்டது. தமிழகத்தின் குடும்பங்களை மரணத்தின் வாயிலில் நிறுத்தியுள்ளது.
இத்தகைய சொல்லொண்ணா துயரங்களால் தவித்த தமிழக மக்கள், கோவனின் பாட்டை கேட்டவுடன் தங்கள் குரலாகவே பார்த்தனர். டாஸ்மாக்கால் ஏற்பட்ட பாதிப்புகளை தோழர் கோவனின் பாடல் துல்லியமாக வெளிப்படுத்தியது. பாடல்கள் நேரடியாகவும், சமூக வலைதளங்களிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இதனால் பல பத்தாயிரம் பேர் கேட்ட கோவனின் பாட்டு, தேச துரோக வழக்கு மற்றும் கைது நடவடிக்கைகளால் லட்சகணக்கானோர் கேட்டனர்... பரப்பினர். வேடிக்கை என்னவென்றால்? போராட்டம் நடக்கும் இடங்களில் போலீசார் சிலர் கூட ரிங்டோனை அவர்கள் கைப்பேசிக்காக வாங்கிக் கொண்டனர். இந்த பெருமை எல்லாம் புரட்சி தலைவிக்கே .
****
தோழர் கோவன் கைதை ஒட்டி சர்வதேச அளவில் கண்டனம் எழுந்தது. ஊடகங்களிலும், சமூக வலை தளங்களிலும், இந்திய, சர்வதேச அளவில் கோவன் விடுதலைக்காக லட்சக்கணக்னோர் குரல் எழுப்பினர். ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களும், மாணவர் போராட்டங்களும், பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் போராட்டம் நடத்தினர். நமது வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தனர் .
தோழர் கோவனை கைது செய்திருப்பதில் சட்ட அடிப்படை ஏதுமில்லை என்பதோடு, பொதுக்கருத்தில் அவரைக் கைது செய்தது தவறு என்பது உருவாகியபடியால் நீதிமன்றம், இத்தகைய பிணையை அளித்தது.
இந்நிலையில் மூக்கு உடைபட்ட சர்வதிகார ஜெயா அரசு, கோவன் மீது போலீசு விசாரணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் 20.11.2015 அன்று மனு செய்துள்ளது.
நடிகர் வடிவேலுவின் வீரபாகு காமெடி போல மீன்பாடி வண்டியில் ஏறி மூத்திர சந்தில் அடிவாங்கியது போதாது என்று, இப்போது ஜெயா அரசு ஏரோப்பிளேன் ஏறி டெல்லிக்கு கிளம்பியுள்ளது.
-மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை.